Tuesday, March 18, 2008

எல்லோரும் ஓ போடலாம்...

அதிர்ச்சியாகத்தான் இருந்தது, "ஓ பக்கங்கள்" விகடனில் நிறுத்தப்பட்ட பொழுது...



ஞானிக்கும் ஓய்வு தேவைப்பட்டிருக்கலாம் என்று எண்ணிய பொழுது குமுதத்தில் ஓ பக்கங்கள்.. நம்மைப் போல் ஞானியின் எழுத்துக்களை மதிப்பவர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதலாகத்தான் இருந்தது, இது. அதன் முதல் அத்தியாயம் படிக்கும் வரை..


"வெகுமக்கள் கருத்துக்கு எதிராக என் கருத்து இருக்கிறதாம். அதனால் விகடனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு-வெளியே வந்துவிட்டேன்" என்ற அவரது பகிரங்க விளக்கம் தேவையற்றதாகவும் ஊடக நெறிகளுக்கு வெளியே இருப்பதாகவும் தோன்றுகிறது. குறிப்பாக, அதை விகடனின் நேரடி போட்டி வார இதழில் எழுதும்போது. அவர் குமுதத்திற்கு மாறியதோ, அங்கு ஓ பக்கங்களைத் தொடர்வதோ அவர் விருப்பம். ஆனால், விகடன் ஏதோ தவறு செய்தது போன்ற தொனியில் எழுதுவது அவரது நிலைப்பாட்டை நியாயப்படுத்த உதவவில்லை என்றே தோன்றுகிறது. ஞானியின் "கருத்துரிமை" விகடனுக்கு இல்லையா என்ன?

அடுத்ததாக, ஜெ - சசியின் திருக்கடையூர் சர்ச்சை பற்றிய அவரது பார்வை.. "தமிழ் மரபுப்படி" அவர்கள் "மாலை மாற்றியிருந்தால்" அது தவறாம்.. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் "மாலை போட்டுக்கொண்டார்களாம்". அது தவறில்லையாம். அவர்கள் மாலை மாற்றிகொள்ளட்டும், அல்லது போட்டுக்கொள்ளட்டும்- முரண் நமக்கு அந்த நிகழ்வோடு இல்லை. ( "மாலைப் போட்டுக்கொள்ளும்போது" ஏன் "கெட்டிமேளம்" கொட்டப்பட்டது என தமிழ்மரபின் படி ஞானி விளக்கினால் உதவீயாக இருக்கும்!) "தமிழ் மரபென்ற" ஒன்றை இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஞானி இதில் மட்டும் ஏன் அதை துணைக்கு அழைக்கிறார் என்பதில் தான்.

கண்ணகியைக் கடவுளாகப் பார்ப்பது கூட "தமிழ் மரபு" தான். அந்த கண்ணகியைத்தான் கரடி பொம்மை என்றார் ஞானி. பிற்போக்குத்தனத்தின் அடையாளமாக கண்ணகியை வர்ணித்தவரும் அவர்தான். அப்பொழுது எங்கே போயிற்று இந்த "தமிழ் மரபு"? (கண்ணகிக்கு வக்காலத்து வாங்குவதல்ல, இதன் நோக்கம்.) நீங்கள் ஒத்துகொள்ளாத ஒன்றை, நீங்கள் அங்கீகரிக்காத ஒன்றை ஏன் அளவீடாக முன்வைக்கிறீர்கள், ஞானி?

கடந்த 2001-இல் விண் நாயகன் இதழின் ஆசிரியராக அவர் இருந்த பொழுது ஒரு விளம்பர இணைப்பு திட்டத்துடன் அவரை நாங்கள் அணுகிய போது, எங்கள் கருத்தை எங்களைக் கொண்டே மறுக்க, மாற்றிக்கொள்ள வைத்தவர் ஞானி.

நான் வளர்ந்து விட்டேனா, இல்லை ஞானியின் கருத்தியல் தள(க)ர்ந்து விட்டதா?

2 comments:

Unknown said...

Gnani-yai vella udhitha (U)Gnani..

Unknown said...

Gnaniyin noyai theerka vandha (U)Gnani